Search This Blog

Friday, March 02, 2012

சினிமாவுக்கு அடையாளம் தந்த வங்காளம்!

இன்று இந்தியத் திரை உலகம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. இந்தியத் திரைப்படங்களுக்கு அரிச்சுவடி எழுதப்பட்டது மேற்குவங்காளத்தில் தான். ஒரு திரைப்படம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதும், கதை, ஒளிப்பதிவு, பாடல்கள் என்று ஒவ்வொன்றாக இந்தியத் திரைத்துறைக்கு கற்றுத் தந்தது மேற்கு வங்க சினிமா துறைதான்.தெற்கு ஆசியாவில் சினிமா என்றாலே விஷயம் தெரிந்தவர்கள் சொல்லும் பெயர்கள், கொல்கத்தாவையும் டாக்காவையும்தான். 1890-ம் ஆண்டு பயாஸ்கோப் காட்சியை, மக்கள் மத்தியில் இதுதான் சினிமா என்று உச்சரிக்க வைத்தது கொல்கத்தாவில்தான். ஹிரா லால்சென்தான் முதன்முதலில் ராயல் சினிமாஸ்கோப் சினிமா கம்பெனி நிறுவனத்தைத் தொடங்கினார்.அதுவரை வீட்டில் ரேடியோ பெட்டியை மட்டும் காதில் வைத்துக்கொண்டிருந்தவர்கள், வீதிக்கு வந்து ஒரு பெட்டிக்குள் காட்சிகளை ரசிக்க ஆரம்பித்தனர். பயாஸ்கோப் அடைந்த வெற்றிதான் வங்காள திரைப்பட வளர்ச்சி உலக அளவுக்குச் செல்ல அடித்தளமாக அமைந்தது.1918-ல் திரேந்திரநாத் கங்குலி இந்தோ பிரிட்டிஷ் பிலிம் அண்ட் கோ கம்பெனியை உருவாக்கினார். வங்காள மொழியில் சொந்தமாக ஒரு பட கம்பெனி உருவானது அப்போதுதான். இந்த நிறுவனம் வெளியிட்ட முதல் திரைப்படம் பில்லாத் பெராத். மாடன் தியேட்டர் நிறுவனம் 1919ல் பல்வா மங்கள் என்ற திரைப்படத்தை வெளியிட்டது. இந்தப் படம்தான் வங்காளத்தில் வெளியான முதல் முழுநீள திரைப்படம். அதற்குப் பிறகு அதே நிறுவனம் 1931-ம் ஆண்டு அமர் சௌதாரி இயக்கத்தில் ஜமாய் சாஸ்தி திரைப்படத்தை வெளியிட்டது. இந்தப் படம் தான் வங்காளத்தில் வெளியான முதல் பேசும் திரைப்படம். 
விளம்பரப் படத்துக்கு அடித்தளமிட்டதும் கொல்கத்தாவில்தான். ஹிராலால் சென் முதலில் விளம்பர படத்தை கொல்கத்தாவில் அறிமுகப்படுத்தினார். 1931 கால கட்டத்தில் வங்க மொழி திரைப்படத் துறையில் புகழின் உச்சியில் இருந்தவர்கள் பிரம்மதீஸ் பரூவா, தீபகி போஸ். பரூவா நிறைய படங்களை இயக்கியிருக்கிறார். இன்று நாம் பார்க்கும் நவீன சினிமாவுக்கு அடையாளம் கொடுத்தவர் பரூவாதான். அதேபோல தீபகி போஸ் 1932-ம் ஆண்டு சந்திதாஸ் என்ற திரைப்படத்தை இயக்கினார். முதன்முதலில் பின்னணி இசையை இந்திய சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இவர்தான்.இந்தியாவில் முதல் ஆஸ்கர் விருதைப் பெற்றுத் தந்த சத்யஜித்ரே என்ற மாபெரும் திரைப்பட இயக்குனரைத் தந்ததும் மேற்கு வங்க சினிமாதான். திரைப்படத் துறையில் பெரும் மறு மலர்ச்சியை ஏற்படுத்தியவர் இவர்தான். எழுத்தாளர், புத்தக வெளியீட்டாளர், ஓவியர், கிராபிக் டிசைனர், திரைப்பட இயக்குனர் என்ற பன்முக திறமை கொண்ட ரே இயக்கிய படங்கள் மொத்தம் 37. இவர் இயக்கிய முதல் திரைப்படம் பதேர் பாஞ்சாலி. இந்தத் திரைப்படம் 11 சர்வதேச விருதுகளைப் பெற்றுத் தந்தது மட்டுமல்லாமல் கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த மனிதநேய திரைப்படம் என்ற பெயரையும் பெற்றது. இவருடைய திரைப்பட வாழ்வில் 32 தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். திரைப்படத் துறையில் இவரின் சாதனையைப் பாராட்டி 1992-ம் ஆண்டு, இந்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது. மனிதர்களின் உணர்வுகளையும், இந்திய கலாசாரத்தையும் தன்னுடைய படத்தில் காட்டுவதை எப்போதும் தவறியதில்லை ரே. தாகூர் பற்றிய இவரின் டாக்குமென்ட்ரி திரைப்படம் இன்றுவரை பாராட்டுக்குரியதாக விளங்குகிறது. வாழ்க்கை சார்ந்த படங்கள் மட்டுமல்லாமல், வித்தியாசமான திகில் படங்கள், துப்பறியும் படங்களையும் இயக்கி, அதில் வெற்றியும் கண்டார் ரே. இருபத்தி நான்கு மணி நேர ரயில் பயணத்தில் ஒரு கதாநாயகன், கதாநாயகி சந்தித்துக்கொள்ளும் நிகழ்வு மட்டுமல்லாமல், அவர்கள் பற்றிய கதை முழுவதும் ஒரு ரயில் பெட்டியிலேயே எடுத்து முடித்த சாருலதா என்ற சத்யஜித்ரேயின் படத்தின் வெற்றியை எந்த சினிமா சம்பந்தப்பட்டவர்களாலும் மறக்க முடியாது. இந்தப் படத்தில் நாயகன் வேடத்தில் நடித்திருந்த உத்தம் குமார், நாயகி ஷர்மிளா தாகூர் இருவரும் இந்தியா முழுவதும் பிரபலமானார்கள்.வங்க மொழி திரைப்படத்துறைக்கு கிடைத்த அடுத்த பொக்கிஷம் மிருணாள் சென். மெடிக்கல் ரெப்ரசென்டேட்டிவாக தன் வாழ்க்கையைத் தொடங்கிய மிருணாள் சென், திரைப்பட ஸ்டூடியோவில் ஆடியோ டெக்னீஷியனாகப் பணிக்குச் சேர்ந்தார். பின்னாளில் சினிமா மீதான காதலில் 1953ல் முதல் திரைப்படத்தை உருவாக்கினார். அவருடைய இரண்டாவது படம் நீல் அக்ஷார் நீச்சி மேற்கு வங்காளத்தை மட்டுமல்ல, சுற்றியுள்ள மற்ற மாநில ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்தது. 
பெய்ஸி ஷர்வண் திரைப்படம் சர்வதேச அளவில் புகழைப் பெற்றுத் தந்தது. இந்த சினிமா இந்திய சினிமாவில் புதிய பாணியை ஏற்படுத்தியது என்றுகூடச் சொல்லலாம். இவருடைய ஒவ்வொரு படத்திலும் கதை, ஒளிப்பதிவு, இயக்கம், எடிட்டிங் போன்ற ஏதோ ஒரு துறையில் ஒரு புதுமையைப் புகுத்தியிருப்பார். அதுதான் மிருணாள் சென்னின் பாணி. இவரது சினிமா கேன்ஸ், வெனிஸ், மாஸ்கோ, கார்லோவேரி, சிக்காகோ, கெய்ரோ போன்ற இடங்களில் சிறந்த திரைப்படத்துக்கான விருதை தட்டிச் சென்றுள்ளது. 

அகிலன்

1 comment:

  1. அருமைப்பதிவு வாழ்த்துகள்

    ReplyDelete