Search This Blog

Sunday, March 11, 2012

ஜெயலலிதாவைக் கேளுங்கள்...- ஓ பக்கங்கள் , ஞாநி

 
இன்னும் பத்து நாட்களுக்குள் ஜெயலலிதா யார் பக்கம் என்பது பகிரங்கமாகிவிடும். சங்கரன்கோவில் தேர்தல் வாக்குப்பதிவு மார்ச் 18 அன்று முடிந்ததும், கூடங்குளம் அணு உலை பிரச்னையில் தில்லிக்கு ஆதரவா, தமிழக மக்களுக்கு ஆதரவா என்பதை ஜெயலலிதா சொல்லியே தீர வேண்டியிருக்கும்.தம் முடிவை ஜெயலலிதா சொல்வதற்கு முன்பு அவரிடம் மக்களாகிய நாம் கேட்கவேண்டிய கேள்விகள் கொஞ்சம் இருக்கின்றன. இந்தக் கேள்விகளுக்கு அவருக்கு பதில் தெரியுமா என்று அவர்தான் சொல்ல வேண்டும். இந்தக் கேள்விகளை நீங்களும் அவரிடம் கேட்க விரும்பினால், இதை ஜெராக்ஸ் எடுத்தோ ஸ்கேன் செய்தோ உங்கள் கையெழுத்திட்டு மாண்புமிகு முதலமைச்சர், தமிழ்நாடு அரசு, புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை -9 என்ற முகவரிக்கோ cmcell@tn.gov.in என்ற முகவரிக்கோ அனுப்புங்கள்.
 
1.ஜப்பானின் மின் தேவையில் 31 சதவிகிதம் கொடுத்து வந்த அணு உலைகள் இப்போது தருவது வெறும் 2 சதவிகிதம்தான். காரணம் 52 உலைகளை அரசு மூடிவிட்டது. மீதி இரு உலைகளும் மே மாதத்தில் மூடப்படலாம். இதெல்லாம் ஏன் என்பது உங்களுக்குத் தெரியுமா?
 
2.கல்பாக்கம் அணு உலைகளில் இதுவரை சுமார் 200 விபத்துகள் நடந்துள்ளன என்பதும் ஒரு விபத்து நூலிழையில் மாபெரும் விபத்தாகாமல் தப்பித்தது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
 
3. செர்னோபில் உலை விபத்தில் இரண்டாயிரம் பேர் இறந்ததாக சோவியத் அதிபர் கோர்பசேவ் சொன்னார். ஆனால் 57 பேர்தான் இறந்ததாக அப்துல் கலாம் மட்டும் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா?
 
4. புற்றுநோய்க்கான காரணங்களில் ஒன்று கதிரியக்கம் என்று அடையாறு புற்று நோய் நிலையம் அறிவித்திருக்கும்போது அதன் தலைவர் டாக்டர் சாந்தா மட்டும் கதிரியக்கத்தால் புற்றுநோய் வராது என்று அணுசக்தித் துறை விளம்பரத்தில் சொல்வது ஏன், எப்படி என்று உங்களுக்குத் தெரியுமா?
 
5. கூடங்குளம் அணு உலைக்கு இடம் தேர்வு செய்தபோது அங்கே மக்களே கிடையாது; அது ஒரு பாலைவனம் போலுள்ளது என்று அணு விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் சொன்னது உண்மையானால்,இப்போது அங்கே ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருவது ஒரு மாயத்தோற்றம் என்பதுதான் உண்மையா என்பது உங்களுக்குத் தெரியுமா?  

6.பத்தாண்டுக்கொரு முறை அடுத்த பத்தாண்டில் இத்தனை மெகாவாட் அணு மின்சாரம் தயாரிப்போம் என்று இந்திய அணுசக்தித் துறை சொன்னது எதையும் 40 வருடங்களில் இதுவரை ஒருமுறை கூட நிறைவேற்றவில்லை என்பதும், சொன்னதில் ஐந்து சதவிகித மின்சாரம் கூட தயாரிக்கவில்லை என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
 
7. இந்தியாவில் ஒரு அணு உலைகூட அதன் நிறுவப்பட்ட உற்பத்தித் திறனில் 50 சதவிகிதத்துக்கு மேல் உற்பத்தி செய்வதில்லை என்பதும் முப்பது வருடத்து கல்பாக்கம் 50 சதத்தை எட்டியதே சில வருடங்களாகத்தான் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
 
8. கூடங்குளம் உலையை உடனே இயக்கினாலும் ஆகஸ்டில்தான் அது மின்சாரம் தரும் என்பதும், அதுவும் உற்பத்தி திறனாகிய 1000 மெகாவாட்டில் 40 சதவிகிதமான 400 மெகாவாட்தான் உற்பத்தி செயும் என்பதும் அதிலும் 48 மெகாவாட்டை அதுவே செலவழித்துவிடும் என்பதும், மீதி 352 மெகாவாட்டில் டிரான்ஸ்மிஷனில் 70 மெகாவாட் போய் விடும் என்பதும், எஞ்சிய 280 மெகாவாட்டில் நாராயணசாமியின் கருணையில் தமிழ்நாட்டுக்கு 50 சதவிகிதம் கொடுத்தாலும், கிடைக்கப் போவது வெறும் 140 மெகாவாட்தான் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
 
9. கல்பாக்கம் அணு உலை வளாகம் சுனாமியால் மட்டுமல்ல, இப்போதைய தானே புயலில்கூட பாதிக்கப்பட்டதும், கல்பாக்கத்துக்கருகே கடலில் எரிமலை இருப்பதும் அதைப் பற்றி அணுசக்தித் துறைக்கு எதுவும் தெரியாது என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
 
10. கூடங்குளத்திலும் கல்பாக்கத்திலும் சுனாமி வராது என்று அணுசக்தித் துறை முதலில் சொன்னதும் சுனாமி வந்தபின் இனிமேல் 9 மீட்டருக்குமேல் வராது என்று சொல்லிக் கொண்டிருப்பதும் உங்களுக்குத் தெரியுமா?
 
10. கூடங்குளம் அணு உலையைக் கட்டியிருக்கும் ரஷ்ய ரோசாட்டம் கம்பெனி அந்த நாட்டில் ஊழல் குற்றச்சாட்டுக்கும் தரக்குறைவான பணிகளுக்காகவும் விசாரிக்கப்படுவது உங்களுக்குத் தெரியுமா?
 
11. கல்பாக்கத்தில் பெரும் விபத்து ஏற்பட்டால் போயஸ் கார்டன், கோபாலபுரம் முதல் பாண்டிச்சேரி வரை அழியும் ஆபத்து உள்ளது என்பதும் கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் தென் மாவட்டங்களும் கேரளத்தின் ஒரு பகுதியும் அழியும் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
 
12. கல்பாக்கத்தில் பெரும் விபத்து ஏற்பட்டால் போயஸ் கார்டன், கோபாலபுரம் முதல் பாண்டிச்சேரி வரை அழியும் ஆபத்து உள்ளது என்பதும் கூடங்குளத்தில் விபத்து ஏற்பட்டால் தென் மாவட்டங்களும் கேரளத்தின் ஒரு பகுதியும் அழியும் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?
 
13. இந்திய அணுசக்திக் கட்டுப்பாட்டு வாரியத்தால் அணுசக்தித் துறையை கண்காணிக்க முடியவில்லை என்றும் வாரியத்தைவிட துறைக்கு செல்வாக்கு அதிகம் இருப்பதால் உண்மைகளைத் தெரிந்துகொள்ள முடிவதில்லை என்றும் வாரியத்தின் முன்னாள் தலைவர் அணு விஞ்ஞானி கோபாலகிருஷ்ணன் சொல்லியிருப்பது உங்களுக்குத் தெரியுமா?
 
14. தமிழ்நாடு முழுவதும் சுமார் ஒரு கோடி குண்டு பல்புகளை சி.எஃப்.எல் குழல் பல்புகளாக மாற்றினால், உடனே 500 மெகாவாட் மின்சாரம் மிச்சமாகும் என்று உங்கள் அரசின் சார்பில் சட்டமன்றத்தில் வைக்கப்பட்ட கொள்கைக்குறிப்பில் சொன்னதை ஏன் அதிகாரிகள் இன்னும் நிறைவேற்றாமல் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
 
15. மத்திய அரசு அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி.. நீங்கள் அமைத்த குழு விஞ்ஞானிகளும் சரி, ஏன் அணு உலைகளை எதிர்க்கும் விஞ்ஞானிகள் குழுவை சந்திக்க மறுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
 
இதற்கெல்லாம் சரியான விடைகள் தெரிந்திருந்தும் சரியான முடிவு எடுக்காவிட்டால் படித்த சிந்தனையாளர் பட்டியலில் உங்களை எவ்வாறு சேர்ப்பது!
 

No comments:

Post a Comment